வாஷிங்டன்: இந்தியாவில் மருந்துப் பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேரியாவுக்கான மருந்தைத் தந்து உதவ வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் கடந்த மாதம் பரிந்துரைத்தது.
அது போல், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் மலேரியா மருந்தைப் பயன்படுத்த ஒப்புதல் அளித்ததோடு, நியூயார்க்கில் சுமார் 1,500 நோயாளிகளுக்கான சிகிச்சையில் மலேரியா மருந்து மற்றும் வேறு சில மருந்துகளின் கலவையும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மாத்திரைகளும் நன்றாகப் பயன் அளிப்பதாக அதிபர் டிரம்ப் அண்மையில் ஊடகங்கள் மத்தியில் தெரிவித்தார்.
இதற்கிடையே, மலேரியாவைக் குணப்படுத்தும் மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25ஆம் தேதி தடை செய்தது.
ஆனால், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை அமெரிக்கா முன்பே கேட்டிருந்தது.
இந்நிலையில், மத்திய அரசின் தடையால் அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்குக் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மோடியுடன் தான் பேசியது பற்றி வாஷிங்டனில் டிரம்ப் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
"நான் இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும் கொவிட்-19 கிருமியை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்படச் சம்மதித்துள்ளோம்.
"அமெரிக்காவுக்கு ஆதரவாக உத்தரவுகளைத் தளர்த்தி இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்," என்று டிரம்ப் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு தான் அந்த மருந்தை எடுத்துக் கொள்வேன் என்றும் அவர் சொன்னார். மக்களும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.
ஆனால், அந்த மருந்து உதவுகிறதா என்பதை உறுதிசெய்ய போதுமான தகவல்கள் இல்லாத நிலையில், டிரம்ப் அவசரமாக மக்களிடம் இவ்வாறு கூறிவிட்டதாக அமெரிக்க மருத்துவ ஆலோசகர்கள் கூறியுள்ளார்.
பெருமளவில் உயிரிழப்புகள் நேரும்
கிருமித்தொற்றுப் பரவல், உயிரிழப்பு குறித்து மேலும் பேசிய டிரம்ப், அடுத்த இரு வாரங்களில் பெருமளவில் உயிரிழப்புகள் நேரும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
"அமெரிக்க மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் மிக, மிக மோசமானதாக இருக்கப் போகின்றன. கொரோனா கிருமித் தொற்றால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடலாம். இதுநாள் வரை அதுபோன்ற சூழலை நாடு பார்த்திராததாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கிருமித் தொற்றால் 311,000த்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் நியூயார்க் மாநிலத்தில் மட்டும் 3,565 பேர் பலியாகினர்.