புதுடெல்லி: மத்திய, மாநில அரசுகளின் அவசரகால உதவி நடவடிக்கைகள் குறித்து 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பது ‘ஜன் சகாஸ்’ எனும் அறநிறுவனம் மேற்கொண்ட கருத்தாய்வின்மூலம் தெரியவந்து இருக்கிறது.
அந்த அமைப்பு கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை தொலைபேசி வழியாக 3,196 பேரைத் தொடர்புகொண்டு, அரசின் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தது. அந்த ஆய்வு முடிவுகள் ‘புலனாகாக் குடிமக்களின் குரல்கள்’ என்ற தலைப்பில் அறிக்கையாக வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆய்வில் பங்கேற்றவர்களில் 62 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் அவசரகால நல்வாழ்வு நடவடிக்கைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. அவற்றைப் பற்றி அறிந்திருந்தாலும் எங்கு சென்று, யாரிடம் உதவி கேட்பது எனத் தெரியவில்லை என 37 விழுக்காட்டினர் கூறினர்.
பெரும்பாலும் ஆண்களிடமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
ஆய்வில் பங்கேற்ற தொழிலாளர்களில் 55 விழுக்காட்டினர் நாளொன்றுக்கு ரூ.200 முதல் ரூ.400 வரை வருமானம் ஈட்டி வந்ததாகவும் அந்தப் பணமே சராசரியாக நான்கு பேரைக் கொண்ட தங்களது குடும்பத்திற்கு ஆதாரம் என்றும் சொன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. 33 விழுக்காட்டினர் அரசாங்கத்தின் முடக்கநிலை அறிவிப்பால் நகரங்களில் சிக்கிக் கொண்டதாகவும் உணவு, குடிநீர், பணமின்றி தவித்து வருவதாகவும் கூறினர்.