இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவல் அசுர வேகமெடுத்துள்ள நிலையில் அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது.
சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களைக் கடந்து விட்டால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 773 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிருமித்தொற்றால் அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 1,018 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் தமிழகத்தில் 690 பேருக்கும், டெல்லியில் 576 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

