புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் போதிய ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காணொளி வசதி மூலம் நாடாளுமன்றத்தில் குறைந்தபட்சம் 5 எம்பிக்கள் கொண்ட கட்சிகளின் தலைவர்களுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் அதரவு தெரிவித்திருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயல்பட முன்வந்தது ஆக்கப்பூர்வமான அரசியலை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூகத்தில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது போன்ற சூழலை கொரோனா கிருமித் தொற்று ஏற்படுத்தி உள்ளது என்றும் இதையடுத்து மத்திய அரசு கடினமான முடிவுகளை எடுக்கவேண்டி உள்ளது என்றும் மோடி கூறியுள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று பரவும் வேகத்தை குறைத்துள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெறும் சவாலை எதிர்கொண்டுள்ளது என்று கவலை தெரிவித்துள்ள பிரதமர், இந்தச் சவாலில் வெற்றி பெறவேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது என்று கூறியுள்ளார்.
பல்வேறு பரிந்துரைகளை வழங்கியதற்காக எதிர்க்கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் அனைவரும் இவ்வாறு ஒன்றுபட்டு செயல்படுவது கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து ஏப்ரல் 11ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி. அதன்பின்னர் மத்திய அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தம்மைத் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் சிலர் மேற்கொண்டு வரும் பிரசாரத்தை தாம் விரும்பவில்லை என பிரதமர் தெளிவுபடுத்தி உள்ளார். பிரதமரின் பணியைக் கௌரவிக்கும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் 5 நிமிடங்கள் எழுந்து நிற்கவேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. இந்நிலையில் இந்த பிரசாரத்தைப் பார்க்கும்போது தொடக்க நிலையில் தம்மை தகராறில் சிக்க வைக்க சிலர் மேற்கொள்ளும் சதித்திட்டமாக எண்ணத் தோன்றுகிறது என மோடி கூறியுள்ளார்.
"என் மீதான அபிமானத்தில்கூட சிலர் இப்படி செய்திருக்கலாம். உண்மையிலேயே என்மீது அன்பு இருப்பவர்கள் எனக்கு மரியாதை செய்யவேண்டும் என்றால் ஏதேனும் ஓர் ஏழைக் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள். இதைவிட எனக்குப் பெரிய மரியாதை இருக்க முடியாது," என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

