மும்பை: மார்ச் மாதம் டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 1,826 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் சவூதி அரேபியா, இந்தோனீசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
சுமார் 25 ஆயிரம் பேர் இதற்காக டெல்லி வந்திருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் கொரோனா கிருமித் தொற்று பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும் மாநாட்டில் பங்கேற்றவர்களால் நாடு முழுவதும் 17 மாநிலங்களில் கிருமித் தொற்று பரவியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், அம்மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்களில் 1,885 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மேலும் இவர்களில் 1,826 பேர் கைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
"மீதமுள்ள 59 பேர் கைபேசியை அணைத்து வைத்துள்ளனர். அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகிறோம். அவர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வெளியே வரவேண்டும். இல்லையெனில் சட்டப்பூர்வ நடவடிக்கை பாயும்.
டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் அனில் தேஷ்முக்.

