மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,364 ஆக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் புதிதாக 229 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் தமிழ்ப் பெண் ஒருவர் கொரோனா கிருமி பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. மும்பையில் மட்டுமே சுமார் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மும்பை மாநகரில் 381 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குடிசைப்பகுதியான தாராவியிலும் கொரோனா கிருமித் தொற்று நுழைந்துள்ளது. அங்கு மூவர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் தாராவியில் உள்ள அனைவருக்கும் கொரோனா கிருமித் தொற்றுக்கான பரிசோதனையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள 7.5 லட்சம் குடியிருப்பாளர்களுக்கு அடுத்து வரும் 15 நாட்களில் இந்தப் பரிசோதனையை நடத்த மும்பை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே தாராவியில் குறிப்பிட்ட சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 'கொவிட் 19' நோயிலிருந்து 22 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர் என்ற தகவல் அம்மாநில மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
மகாராஷ்டிராவில் கொவிட் 19 நோயால் இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 200ஐ கடந்துள்ள நிலையில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத்தில் 17 பேர் கொரோனா கிருமித் தொற்றால் பலியாகியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் 16 பேர், டெல்லியில் 12 பேர், பஞ்சாப், தமிழகத்தில் தலா 8 பேர், தெலுங்கானாவில் 7 பேர், மேற்கு வங்கத்தில் 5 பேர், ஆந்திரா, உத்திரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா 4 பேர், ராஜஸ்தான், ஹரியானாவில் தலா 3 பேர், கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பீகார், ஒடிசா, இமாச்சலப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

