புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்று பரவலைத் தடுப்பதிலும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலும் இந்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
கொரோனா கிருமித் தொற்று பரவல் தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ.16,500 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அந்த வங்கி கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது இந்தியாவின் அவசரத் தேவைகளுக்கு ஆதரவளிக்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
"இப்போது சுகாதாரத் துறைக்கு உடனடி உதவியாக 2.2 பில்லியன் டாலர்களை அனுப்ப உள்ளோம். தொற்றுநோயினால் ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், மற்றும் நிதித் துறை மீதான பொருளாதார தாக்கத்தை தணிக்க உதவுகிறோம்," என்று அசகாவா தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் இந்தியாவுக்கான உதவித்தொகை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அவசர உதவி, கொள்கை அடிப்படையிலான கடன்கள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதிகளை விரைவாக விநியோகிக்க அனைத்து நிதி வழிமுறைகளையும் அந்த வங்கி பரிசீலிக்கும் என்று அசகாவா மேலும் தெரிவித்துள்ளார்.

