இந்தியாவில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

3 mins read
13e23ba0-4289-48cb-a549-5a9281f8d48d
புது டெல்லியில் கிருமிநாசினியைத் தெளிக்கும் ஆளில்லா வனூர்தி. (படம்: ஸ்ட்ரரெய்ட்ஸ் டைம்ஸ்) -

கொரோனா கிருமித்தொற்று எதிரொலியாக இந்தியாவில் நடப்பில் இருக்கும் ஊரடங்கு நிலை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இந்திய நேரப்படி இன்று காலை 10 மணிக்கு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களிடம் உரையாற்றிய திரு மோடி, கிருமித்தொற்று புதிய இடங்களுக்குப் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் வரும் 20ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு மாநிலத்திலும் முடக்க நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா என அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்து இருக்கிறார்.அது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் இன்று வெளியிடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். குறிப்பிடத்தக்க அளவுக்கு கிருமித்தொற்று இல்லாத பகுதிகளில் இம்மாதம் 20ஆம் தேதிக்குப் பிறகு முடக்க நடவடிக்கைகள் தளர்த்தப்படலாம் என்றும் அவர் சொன்னார்.அரசாங்கத்தின் முழுமையான அணுகுமுறையாலும் மக்களின் அர்ப்பணிப்புகளாலும் இந்தியாவில் கிருமித்தொற்று கட்டுக்குள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த மாதம் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட 21 நாள் முடக்கநிலை பெரும் பலனை அளித்து இருப்பதாகக் கூறிய திரு மோடி, இந்தியா குறைவான வளங்களைக் கொண்டுள்ளபோதும் நிலைமையைச் சிறப்பாகக் கையாண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமது உரையின் முடிவில், "உங்கள் வீட்டில் உள்ள மூத்த குடிமக்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்றுவதுடன் வெளியில் செல்லும்போது வீட்டிலேயே தயாரித்த முகக்கவசங்களை அணிந்து செல்லுங்கள். 'ஆயுஷ்' அமைச்சு வெளியிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ளுங்கள். 'ஆரோக்கிய சேது' செயலியைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். முடிந்தவரை வறியவர்களுக்கு உதவுங்கள். முதலாளியாக இருந்தால் எவரையும் பணிநீக்கம் செய்யாதீர்கள். மருத்துவர்கள், தாதிகள், போலிசார், துப்புரவு ஊழியர்கள் போன்ற கொரோனா போராளிகளுக்கு மரியாதை கொடுங்கள்," என இந்திய மக்களுக்கு அவர் ஏழு வேண்டுகோள்களையும் விடுத்துள்ளார். அந்த முதற்கட்ட முடக்கநிலை அறிவிப்பு இன்று நள்ளிரவுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த முடக்கநிலை அறிவிப்பு ஒட்டுமொத்த பொருளியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகியுள்ளன. இதையடுத்து, ஒரு சில துறைகள் மட்டும் செயல்படும் வகையில் முடக்க நடவடிக்கைகளைத் தளர்த்த வேண்டும் என கடந்த சனிக்கிழமை நடந்த காணொளிவழி கலந்துரையாடலின்போது பல மாநில முதல்வர்களும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்ததாக 'பிடிஐ' செய்தி தெரிவிக்கிறது. திரு மோடி அறிவிப்பதற்கு முன்னரே, தமிழ்நாடு, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்கள் முடக்கநிலையை இம்மாத இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தன. ரயில்கள் இயக்கப்படாது இதனிடையே, தேசிய ஊரடங்கை ஒட்டி ரயில் சேவைகள் ரத்து மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது. முடக்கநிலை காலகட்டத்தில் எழும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கவும் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலநிலையைத் தணிக்கவும் மத்திய தொழிலாளர் அமைச்சு நாடு முழுவதும் 20 கட்டுப்பாட்டு மையங்களை அமைத்து இருக்கிறது. உதவி தேவைப்படுவோர் தொலைபேசி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் மூலமாக இந்த அழைப்பு மையங்களைத் தொடர்புகொள்ளலாம். இந்தியாவில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 10,363 பேரைக் கிருமி தொற்றிவிட்டது. அதனால் 339 பேர் மாண்டுவிட்டனர். இதுவரை 1,035 பேர் அதிலிருந்து தேறிவிட்டனர்.