புவனேஸ்வர்: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் சொந்த ஊருக்கு உடனடியாகத் திரும்ப முடியாத ஒருவர் 1700 கி.மீ. தூரத்தை சைக்கிளில் பயணம் செய்து கடந்துள்ளார்.
ஒடிசாவைச் சேர்ந்த 20 வயதான மகேஷ் ஜினா என்ற இளையர் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் வேலை பார்த்த தொழிற்சாலை மூடப்பட்டது.
மேலும், பொதுப்போக்குவரத்தும் முடங்கிய நிலையில் சொந்த ஊருக்குச் செல்ல இயலாமல் தவித்தார் மகேஷ். ஒரு வாரம் நிலைமையைச் சமாளித்த நிலையில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை அடுத்த 3 மாதங்களுக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என அவருக்குத் தகவல் கிடைத்தது.
இதனால் கையில் உள்ள 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தைக் கொண்டு எதுவும் செய்ய இயலாது என அவர் பயந்தார். 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெறும் அவருக்கு உணவுக்காக மட்டும் மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இதையடுத்து தொழிற்சாலைக்குச் செல்வதற்காக வாங்கி வைத்திருந்த பழைய மிதிவண்டியில் சொந்த ஊருக்குப் புறப்பட்டார் மகேஷ்.
கடந்த 1ஆம் தேதி முதல் மகாராஷ்டிரா, ஆந்திரா, சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களையும் கடந்து சொந்த மாநிலமான ஒடிசா சென்று சேர்ந்துள்ளார். இதற்காக அவர் மொத்தம் 1,700 கி.மீ. தூரத்தைக் கடக்க வேண்டி இருந்தது.
“தினமும் 14 மணி நேரம் மிதிவண்டி ஓட்டினேன். குளிர், வெயில் பாராமல் கிடைத்த உணவை வாங்கிப் பசியாறி சற்று நேரம் மட்டும் ஓய்வெடுத்து பயணத்தைத் தொடர்ந்தேன்.
“வழியில் உள்ள குளங்களில் குளித்தேன். ஒருவழியாக கடந்த 7ஆம் தேதி சொந்த கிராமத்தைச் சென்றடைந்தேன்,” என்று மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கிராம எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அவர், அங்குள்ள பள்ளிக் கட்டடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.