புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 13,495 ஆக உயர்ந்தது. அவர்களில் 60 விழுக்காட்டினர் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கொவிட்-19 எனப்படும் அந்தக் கிருமி தொற்றுக்கு இலக்காகி 452 பேர் பலியாகிவிட்டனர். ஆனாலும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை வேகமாகக் கூடி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
நேற்றைய நிலவரப்படி 1,767 பேர் குணமடைந்து உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு அவ்வளவு மோசமாக இல்லை என்றாலும் இன்னமும் தொற்று ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
நாட்டில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த நிலை நீடிக்கும் பட்சத்தில் மே மாதம் முதல் வாரத்தில் கொவிட்-19 தாக்கம் உச்சத்தை அடையலாம் என்றும் அதன் பின்னர் குறையும் என்றும் உள்துறை அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா, புதுடெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது.
இதனிடையே, 53 உலக நாடுகளில் உள்ள 3,336 இந்தியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்று இருப்பதாகவும் வெளிநாடுகளில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ளது என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் குறிப்பிட்டன.
கொவிட்-19 காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை உடனடியாகத் தாயகம் கொண்டு வருவது சாத்தியமானது அல்ல என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

