வெளிநாட்டினருக்கு இந்தியா ஏற்கெனவே அளித்த விசாவுக்கான தடை அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஐநா மற்றும் அனைத்துலக அமைப்புகளைச் சேர்ந்த பேராளர்கள், அதிகாரிகள் போன்ற ஒரு சில பிரிவினருக்கு இதில் விதிவிலக்கு உண்டு.
கொரோனா கிருமித்தொற்று பரவலைத் தடுக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் தடை நீட்டிக்கப்படுவதாக உள்துறை அமைச்சின் ஆணை தெரிவித்தது.
நாட்டின் 107 குடிநுழைவு சோதனைச் சாவடிகள் வழியாக பயணிகள் வருவதற்கும் தடை மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்கள், விமானங்கள், கப்பல்கள், ரயில்கள் போன்றவற்றுக்குத் தடையேதும் இல்லை.
அதில் ஈடுபடும் விமானப் பணியாளர்கள், ஓட்டுநர்கள், மாலுமிகள், உதவியாளர்கள், துப்புரவாளர்கள் என அனைவருக்கும் கொவிட்-19 பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.
மார்ச் மாதம் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இந்தியாவில் மே மாதம் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு நடப்பில் இருக்கும் 25வது நாளான இன்று காலை நிலவரப்படி அங்கு 14,378 பேருக்கு கிருமி தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; 480 பேர் உயிரிழந்துள்ளனர்.