புதுடெல்லி: முடக்கநிலையை நீக்குவது அல்லது தளர்த்துவது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும் வரை விமானப் பயணத்திற் கான முன்பதிவுகளை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய விமான நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.
கொரோனா கிருமிப் பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் மே 3ஆம் தேதிக்குப் பிறகு இந்திய அரசு என்ன மாதிரியான முடிவுகள் எடுக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை.
எனினும், பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் இன்று 20 ஆம் தேதிக்குப் பிறகு சில தொழில் நிறுவனங்கள், சேவைகளைத் தொடங்க உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியிருக்கிறது.
மே 3ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எப்படி இருக்கக்கூடும் என்று தொடர்ந்து கேள்வி எழுந்து வரும் நிலையில் தற்போது ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானச் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்தியாவில் மே 4ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும். பயணிகள் குறிப்பிட்ட சில உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அதேபோல், ஜூன் 1ஆம் தேதி முதல் அனைத்துலக விமானங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் விமானப் பயண முன்பதிவுகளை தொடங்க வேண்டாம் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி சனிக்கிழமை இரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். "உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணங்களை மீண்டும் தொடங்குவது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சு இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

