புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பல நாடுகளைவிட குறைவாகவே இருக்கிறது என்றாலும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் பொருளியல் பாதிப்பும் தொடர்ந்து கூடுகிறது.
இந்தியாவில் இதுவரையில் 681 பேர் பலியாகிவிட்டனர். 4,258 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 16,454 பேருக்குத் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 21,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நேற்று சுகாதார, குடும்பநல அமைச்சு தெரிவித்தது.
இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் தேதி நிலவரப்படி, 485,172 மக்களிடம் இருந்து மொத்தம் 500,542 ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் குறிப்பிட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு 5,652 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 269 பேர் பலியானதாக அதிகாரிகள் கூறினர்.
அந்த மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவி பகுதியில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
தாராவி பகுதியில் மொத்தம் 189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுடெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு நடப்புக்கு வந்ததால் 12 கோடி வேலைகள் பறிபோய்விட்டதாகவும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 7,500 ரூபாய் அரசு உதவி வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி கோரியது.
காங்கிரஸ் பிரமுகர்களிடம் காணொளி மூலம் கூட்டம் நடத்திய அந்தக் கட்சியின் இடைக்கால தலைவி சோனியா, கொரோனா கிருமித்தொற்றை ஒடுக்குவதில் பரிசோதனை மிக முக்கியம் என்பதை திரும்பத்திரும்ப வலியுறுத்தி னாலும் மத்திய அரசு அதற்குச் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் ஊரடங்கை நீட்டித்தால் பொருளியல் பாதிப்பு தாங்க முடியாத அளவுக்குப் படுமோசமாகப் போய்விடும் என்று அவர் கடுமை யாக எச்சரித்தார்.
இவ்வேளையில், இந்தியப் பொருளியல் 2021 மார்ச் வரைப்பட்ட நிதியாண்டில் 0.8%தான் வளரும் என்று உலகப் பொருளியல் கணிப்பு அறிக்கையில் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் (Fitch Ratings) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, கிருமித்தொற்று காரணமாக இந்தியாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் அங்கு புலம்பெயர்ந்த தொழிலாளிகள் நான்கு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என உலக வங்கி கூறியது.
இந்தியாவுக்கு உள்ளேயே தொழிலாளர்கள் இடம்பெயர்ந்துள்ள அளவு, உலக அளவுகளைவிட இரண்டரை மடங்கு அதிகம் என்பதை அறிக்கையில் வங்கி சுட்டியது.

