புதுடெல்லி: ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் கொரோனா கிருமித் தொற்றுப் பரவல் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்குக்கு முன்பு நாள்தோறும் புதிதாக கிருமித் தொற்றியோர் எண்ணிக்கை சுமார் 500ஆக இருந்தது. அச்சமயம் கிருமித் தொற்று அதிகரிப்பு விகிதம் 21.6ஆக இருந்த நிலையில், தற்போது அது 8.1 விழுக்காடாக குறைந்துள்ளது.
எனினும் சில நாடுகளை ஒப்பிடும்போது நோய் அதிகரிப்பு விகிதம் இந்தியாவில் சற்று அதிகமாகவே காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
"ஜெர்மனியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கு பிறகு அதிகரிப்பு விகிதம் 2 விழுக்காடாகவும், அமெரிக்காவில் அதிகரிப்பு விகிதம் 4.8 விழுக்காடாகவும் உள்ளன.
"எனவே தற்போதுள்ள புள்ளி விவரங்களின்படி கணக்கிடும் போது அடுத்த ஒரு வாரத்துக்குள் நாட்டில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை எட்டிப் பிடித்திருக்கும்," என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுவதாக தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்த இரு வார காலத்திற்குள் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 70 ஆயிரமாகவும் மே மாதம் இறுதிக்குள் 2.5 லட்சம் பேராகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 3ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருமா என்பதை அறிய மக்கள் ஆவலாக உள்ளனர்.

