தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றில் இருந்து குணமடைவோர் அளவு 52% ஆகக் கூடி இருக்கிறது என்றும் இதை கொரோனா கிருமித்தொற்று நிலவரம் அறியும் மத்திய குழு பாராட்டி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
“கொரோனா கிருமி தொற்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களில் 100ல் 41 பேர் குணமடைந்து வந்தனர். இப்போது அந்த அளவு 52% ஆகக் கூடி இருக்கிறது. மொத்தம் 960 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைவோர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது,” என்று அமைச்சர் விளக்கினார்.
மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 26) காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 1,821 பேர் கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தனர். மரண எண்ணிக்கை 23 ஆக இருந்தது.
இந்நிலையில், சென்னையில்தான் தொற்று அதிகமாக இருக்கிறது என்று கூறிய அமைச்சர், சனிக்கிழமை அந்நகரில் புதிதாக 43 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை 34 வயதுள்ள ஆடவர் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். இதுவரை கொரோனாவுக்குப் பலியாகி இருப்போரில் இவருக்குத்தான் வயது மிகவும் குறைவு என்பதால் அவரது உடலைப் பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.