புதுடெல்லி: கொரோனா கிருமித் தொற்றை எதிர்த்துப் போரிடும் வீரர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அனைவரும் தேசத்திற்காகப் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
நேற்று வானொலி நிகழ்ச்சி வழி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடும் கதாநாயகர்களுக்கு நாடு தலைவணங்குவதாகக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் கொரோனா கிருமிக்கு எதிரான போரை மக்கள் நடத்துவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் போராட்டத்தில் மக்களும் அரசும் இணைந்து செயல்படுவதாகத் தெரிவித்தார்.
தற்போது நடைபெறும் போரில் குடிமக்கள் அனைவரும் போர் வீரர்கள் போல் செயல்படுவதாக வர்ணித்தார் பிரதமர் மோடி.
"இந்தப் போராட்டத்தில் ஏழைகளுக்கு சிலர் உணவு வழங்குகின்றனர். சிலர் நிலங்களை விற்று உதவுகின்றனர். மேலும் ஒருசிலர் தங்கள் ஓய்வூதியத்தை அளித்துள்ளனர்.
"யாரும் பசியுடன் இருக்கக்கூடாது என்பதை நமது விவசாயிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இக்கட்டான வேளையில் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற உதவியைச் செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், நாடு தற்போது சரியான பாதையில் செல்கிறது என்றார்.
மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் இவ்வாறு தாக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதற்காக அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டினார்.
"கொரோனாவுக்கு எதிராகப் போராடும் நாயகர்களுக்கு நாடு தலைவணங்குகிறது. சுகாதாரப் பணியாளர்களின் பணி போற்றுதலுக்கு உரியது. தூய்மைப் பணியாளர்களின் சேவையை தற்போது அனைவரும் உணர்கின்றனர்.
"காவல்துறையினர் உதவி செய்வதை நாம் பார்க்கிறோம். அவர்களின் பணியும் பாராட்டுக்குரியது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா உதவியுள்ளது," என்றார் பிரதமர் மோடி.
கொரோனா கிருமித் தொற்றிலிருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று குறிப்பிட்ட பிரதமர், சாலைகளில் எச்சில் துப்புவதைப் பாவச் செயல் என மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டதாகத் தெரிவித்தார்.
இதுபோன்ற தீய பழக்கங்களைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

