மும்பை: கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் காணொளி வசதி மூலம் தன் குழந்தையைக் கொஞ்ச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அவுரங்காபாத்தைச் சேர்ந்த அந்தப் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஏப்ரல் 18ஆம் தேதி குழந்தை பிறந்தது. பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் குழந்தைக்கு கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதனால் தாயிடம் இருந்து குழந்தை பிரிக்கப்பட்டது. அப்பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பெண் குழந்தையைப் பார்க்க முடியாமல் தவித்துள்ளார். அவரது தவிப்பைக் கண்டு நெகிழ்ந்துபோன மருத்துவமனை ஊழியர்கள் காணொளி வசதி மூலம் குழந்தையைப் பார்க்க ஏற்பாடு செய்தனர்.
இதன் மூலம் முதன்முறையாக தாம் பெற்றெடுத்த குழந்தையை கண்டு பரவசம் அடைந்தார் அந்தப் பெண். இதையடுத்து அவர் அவ்வப்போது காணொளி மூலம் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறார்.

