மும்பை: கொரோனா கிருமித் தொற்றை தடுப்பதற்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் மகாராஷ்டிராவில் உள்ள 'செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' என்ற நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
தற்போதைய நிலையில், பரிசோதனைகள் வெற்றிகரமாக அமைந்தால் அடுத்த மூன்று வாரங்களுக்குள் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் துவங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதிர் பூனேவாலா தெரிவித்துள்ளார்.
அனைத்துலக அளவில் இந்த மருந்தை தயாரிக்க ஏழு மிகப் பெரிய நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"எதிர்வரும் அக்டோபரில் இந்த தடுப்பூசிகள் விற்பனைக்கு வரும். முதல் கட்டமாக, முதல் ஆறு மாதங்களில், மாதத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகளும் அதன்பிறகு மாதத்துக்கு ஒரு கோடி தடுப்பூசிகளும் தயாரிக்க முடிவு செய்துள்ளோம்.
"இந்த மருந்துக்கு நாங்கள் காப்புரிமை கோர மாட்டோம். அனைத்து நாடுகளுக்கும் மருந்து கிடைக்கும் வகையில் சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வோம். இந்தியாவில், புனேயில் உள்ள எங்களுடைய ஆலையிலேயே இந்த மருந்தை தயாரிப்போம்," என்று ஆதிர் பூனேவாலா மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கு என தனி ஆலை அமைக்கப்படும் என்றும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இது சாத்தியமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை அந்த முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை.

