தமிழகத்தில் 111 குழந்தைகளுக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரத்தில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே 10 மாத குழந்தை ஒன்று கிருமித்தொற்றால் பாதிக்கப்படிருந்தது. 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகள் மற்றும் சிறுவர்களில் 59 ஆண் குழந்தைகளும் 51 பெண் குழந்தைகளும் அடங்குவர்.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,931ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 809 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 94,781 பேரிடம் கிருமித் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி சுமார் 30,000 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். மாநிலம் முழுவதும் இதுவரை 1,101 பேர் குணமடைந்துள்ள நிலையில் 24 பேர் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட 10 மாவட்டங்களில் 570 பேருடன் சென்னை முதலிடத்தில் உள்ளது. கோவையில் 141, திருப்பூரில் 112, திண்டுக்கல்லில் 80, மதுரையில் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.