இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் 3,580க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களில் 64 விழுக்காட்டினர் ஆண்கள். இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக, பெண்களைவிட ஆண்கள்தான் கொரோனா கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்றால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு ஆண்களின் ரத்தத்தில் அதிகம் காணப்படும் ஒரு நொதி (enzyme) காரணமாக இருக்கக்கூடும் என்று European Heart Journal எனும் சஞ்சிகையில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஆய்வுக்காக 11 ஐரோப்பிய நாடுகளில் இதய பிரச்சினைகள் கொண்ட 3,720 பேரிடம் எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் ரத்தத்தில் இந்த நொதியின் அளவு குறைவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
“ACE2 எனப்படும் அந்த நொதி கொரோனா கிருமியுடன் இணைந்து தாக்கப்பட்டவரின் உடலில் செல்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் ACE2 நொதி நுரையீரலில் அதிகம் காணப்படுவதால், கிருமித்தொற்றுக்கு ஆளாபவர்களுக்கு சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன,” என்று நெதர்லாந்தில் உள்ள Medical Center Groningen பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஆட்ரியன் வூர்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, வயது அடிப்படையில் பார்த்தால், 0.5 விழுக்காட்டினர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 2.5 விழுக்காட்டினர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 11.4 விழுக்காட்டினர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
35.1 விழுக்காட்டினர் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். 50.5 விழுக்காட்டினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். உயிரிழந்தவர்களில் 73 விழுக்காட்டினர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்பட்டது.
உலகளாவிய கொரோனா இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவில் இறப்பு விகிதம் 3.06 சதவீதம்தான்.
கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டு குணமடைவோரின் விகிதம் 40.32 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online