குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதிக்கு அருகில் உள்ள கிர் கத்டா மாவட்டத்தின் பக்கா கிராமத்திலிருந்து நிறைமாத கர்ப்பிணி ஒருவரை ஏற்றிக்க்கொண்டு அவசர சிகிச்சை வாகனம் ஒன்று கடந்த புதன் கிழமை இரவு 10 மணி வாக்கில் கிர் கத்டா சமூக சுகாதார மையத்துக்கு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது.
அடர்ந்த வனப்பகுதியின் நடுவே அந்த வாகனத்தின் வெளிச்சம் மட்டுமே வழிகாட்டிய நிலையில், 18 கி.மீ. தூரத்தைக் கடக்க வேண்டிய அந்த வாகனம் அரை மணி நேரத்தில் 12 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்தது. ஆனால், இன்னும் ஆறு கிலோமீட்டர் தூரம் இருக்கும் நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது.
சாலையின் நடுவில் நான்கு சிங்கங்கள் அமர்ந்திருந்ததைக் கண்ட ஓட்டுநர், சிங்கங்கள் இருந்த இடத்துக்கு சற்று தூரத்திலேயே வாகனத்தை நிறுத்திவிட்டார். வாகனம் வருவதைக்கூட சட்டை செய்யாமல் சிங்கங்கள் அந்த இடத்திலேயே இருந்தன.
அவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் சிங்கங்கள் இத்தகைய சமயங்களில் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை அறிந்திருந்ததால் , வாகனத்தை நிறுத்திவிட்டு அமைதிகாக்க எண்ணினார்.
ஆனால், பிரசவ வலியில் துடித்த 30 வயது கர்ப்பிணி அஃப்சானா ரஃபீக்கை மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசெல்ல வேண்டிய சூழல்.
இந்நிலையில், அந்த வாகனத்திலேயே பிரசவம் பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த அவசர வாகன தொழில்நுட்பருக்கு அந்த எண்ணமே நடுக்கத்தை ஏற்படுத்தியது.
தொலைபேசி வழியாக மருத்துவர் வழங்கும் ஆலோசனையைப் பின்பற்றி பிரசவம் பார்க்க பணிக்கப்பட்டார் ஜெகதீஷ் மக்வானா எனும் அந்த ஊழியர்.
ராசிலா மக்வானா எனும் மற்றொரு ஊழியரும் அஃப்சானாவின் தாயாரும் வாகனத்தில் உடன் இருந்தனர்.
சிங்கங்கள் சாலையை மறைத்திருப்பது பற்றி கர்ப்பிணிக்கு தெரியப்படுத்தவில்லை; ஆனால், சற்று நேரத்தில் சிங்கங்களின் கர்ஜனை வாகனத்துக்குள்ளேயும் கேட்கத் தொடங்கியது.
வெளியில் சிங்கங்களின் கர்ஜனைக்கு நடுவே, வாகனத்துக்குள் அழகிய பெண் குழந்தையை ஈன்றார் அஃப்சானா.
குழந்தையின் அழுகுரல் வாகனத்தை நிரப்பியபோதுதான் எங்களுடைய முகத்தில் புன்னகை பிறந்தது என்றனர் உடனிருந்தவர்கள்.
சுமார் 25 நிமிடங்கள்வரை அவ்விடத்தில் உலா வந்த சிங்கங்கள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பிறகே வாகனம் மருத்துவமனையை நோக்கி பறந்தது.