கேரளாவின் மலப்பரத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்ட சில கோழிகள் இட்ட முட்டைகளின் கரு பச்சை நிறமாக இருப்பது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்தகைய முட்டையைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதனையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலரும் கோழியின் முதலாளியைத் தொடர்புகொண்டனர். வெலிநாடுகளிலிருந்தும் சிலர் ஆச்சரியத்துடன் வினாக்களை எழுப்பினர்.
மலப்புரத்தின் ஒதுக்குங்கல் பகுதியைச் சேர்ந்த ஷிஹாபுதீன் என்பவரின் பண்ணையில் வளர்க்கப்பட்ட கோழிகள்தான் இவ்வாறு வித்தியாசமான முட்டைகளை இடுகின்றன.
இதனையடுத்து, பச்சை நிற கருவுடன் கோழிகள் முட்டையிடுவதன் தொடர்பில் கேரளா கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (KVASU) ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
சுமார் 9 மாதங்களுக்கு முன்பு தமது பண்ணையில் ஒரு கோழி இவ்வாறு முட்டையிட்டதாகக் குறிப்பிட்ட ஷைஹாபுதீன், அதனை உட்கொள்வது பாதகத்தை விளைவிக்குமோ என்ற அச்சத்தில் அதனை யாரும் சாப்பிடவில்லை என்றார்.
ஆனால், அந்தக் கோழியின் சில முட்டைகளை அடையில் வைத்து குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்ததாகக் கூறிய அவர், அந்த முட்டைகளிலிருந்து பிறந்த கோழிகளின் முட்டைகளும் இதே போன்ற வித்தியாசமானவையாக் ஐருப்பதாகக் கூறினார்.
குஞ்சுகள் பொறிக்கும் திறன் பெற்ற இந்த முட்டைகள் உடலுக்கு கேடு எதுவும் விளைவிக்காது என்று கருதி, தற்போது அத்தகைய முட்டைகளைச் சாப்பிடுவதாகச் சொன்ன திரு ஷிஹாபுதீன், அந்த முட்டைகளின் சுவை மற்ற முட்டைகளைப்போலவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இந்த ரக கோழிகளை பலரும் விலைக்குக் கேட்பதாகக் கூறிய திரு ஷிஹாபுதீன், அதுபோன்ற கோழிகளை அதிகமாக உற்பத்தி செய்து விற்பனை செய்யத் திட்டமிடுகிறார்.
பச்சை வண்ண கருவுடன் முட்டையிடும் கோழிகள் வித்தியாசமான தீவனம் எதையாவது சாப்பிட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். ஆனால், அவ்வாறு வித்தியாசமான தீவனம் எதையும் தமது கோழிகளுக்கு வழங்கவில்லை என்கிறார் ஷிஹாபுதீன்.
தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வு நிறைவடைய இன்னும் சில நாட்கள் ஆகும் என்று ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அத்தகைய முட்டையிடும் இரண்டு கோழிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online