புதுடெல்லி: மே 25 முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ள நிலையில் பயணச் சீட்டுகளின் கட்டணம் அதிகமாக இருக்கும் என்று ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், விமானப் பயணக் கட்டணங்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சு முறைப்படுத்தப்படுத்தி உள்ளது. இதற்காக விமான வழித்தடங்கள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
அதாவது, 40 நிமிடங்களுக்குக் குறைவான பயண நேரம், 90-120 நிமிடங்களுக்குட்பட்ட பயண நேரம் என்பதுபோல பல பிரிவுகள் உருவாக்கப்பட்டு அதற்கேற்ப விமானப் பயணச் சீட்டுகளின் கட்டணம் நிர்ணயிக்கப்படும்
அதன்படி, குறைந்தபட்ச பயணக் கட்டணமாக ரூ.2,000மும் அதிகபட்சக் கட்டணமாக ரூ. 18,600மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு இடையே பயண நேரம் 90 முதல் 120 நிமிடங்களாக இருக்கும்பட்சத்தில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.3,500மும் அதிகபட்சக் கட்டணமாக ரூ.10,000மும் வசூலிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணக் கட்டணங்கள் தொடர்பான இந்த நடைமுறை உடனே அமலுக்கு வருவதாகவும் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நள்ளிரவு வரை மூன்று மாதங்களுக்கு இதே கட்டண முறை நடப்பில் இருக்கும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 40 விழுக்காட்டு விமானப் பயணக் கட்டணங்கள் அதிகபட்ச விலை, குறைந்தபட்ச விலை
ஆகிய இரண்டுக்கும் நடுவில் விற்கப்பட வேண்டும். உதாரணமாக, 3,500 ரூபாய்க்கும் 10,000 ரூபாய்க்கும் இடையிலான கட்டணம் 6,700 ரூபாயாகும்.
எனவே 40 விழுக்காடு பயணச் சீட்டுகள் 6,700 ரூபாய்கு விற்கப்பட வேண்டும். இதன்மூலம் டிக்கெட்டுகளின் விலை மிகவும் அதிகமாகாமல் கட்டுப்படுத்தலாம் என்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறை செயலாளர் தெரிவித்தார்.