பாட்னா: பீகாரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஜோதி குமாரி. 8ஆம் வகுப்பு மாணவி. தனது தந்தை மோகன் பஸ்வானுடன் அரியானா மாநிலம் குர்கானில் வசித்து வந்தார்.
மோகன் பஸ்வான், ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தார். கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்ததோடு ஒரு விபத்திலும் சிக்கி காயம் அடைந்தார்.
அவரிடம் இருந்த ஆட்டோ ரிக்ஷாவை அதன் உரிமையாளர் திரும்ப பெற்றுக்கொண்டார்.
இனி என்ன செய்வது என விதியை நொந்தவாறு யோசித்த அவர், 1,200 கிலோ மீட்டர் தொலைவில் பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்குத் திரும்பி அங்கேயே பிழைப்பைத் தேடிக்கொள்வது என முடிவு செய்தார். கையில் இருந்த பணத்தைக்கொண்டு மகளுக்கு ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார்.
தந்தையை சைக்கிளின் பின்னால் அமர வைத்துக்கொண்டு, ஜோதி குமாரி கடந்த 10ஆம் தேதி குர்கானிலிருந்து சைக்கிளை ஓட்டத் தொடங்கினார்.
ஏழு நாட்கள் இரவும் பகலும் தொடர் சவாரிக்கு பின்னர் கடந்த 16ஆம் தேதி பீகாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு தந்தையுடன் சென்றடைந்தார்.
1,200 கி.மீ. தொலைவுக்கு தனது தந்தையை பின்னால் ஏற்றிக்கொண்டு ஒரு சிறுமி சைக்கிள் ஓட்டி இருக்கிறார் என்பது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி விட்டது.
இதனை அறிந்த டெல்லியில் இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள தேசிய சைக்கிளோட்ட சம்மேளனம் பெரும் வியப்படைந்தது.
ஒரு சிறுமிக்கு இது எப்படி சாத்தியமாயிற்று என்று சம்மேளனத்தைச் சேர்ந்தோர் ஆச்சரியமடைந்தனர்.
தற்போது சிறுமி ஜோதி குமாரியை அழைத்து அவரது சைக்கிள் ஓட்டும் திறனை சோதித்துப் பார்க்க முடிவு செய்திருக்கிறது இந்திய விளையாட்டு ஆணையத்தின்கீழ் செயல்படும் இந்த அமைப்பு.
அமைப்பின் தலைவர் ஓங்கர் சிங், “எங்களது சோதனையில் தேர்ச்சி பெற்றுவிட்டால் ஜோதி குமாரியை தேசிய சைக்கிளோட்ட பயிற்றுநர்களில் ஒருவராக நியமிப்போம்.
“ஏற்கெனவே எங்களிடம் 14, 15 வயதில் 10 வீரர்கள் இருக்கிறார்கள். இளம் வீரர்களை நாங்கள் வளர்த்தெடுக்க விரும்புகிறோம்,” என்றார்.