புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பரவாமல் தடுப்பதற்காக மார்ச் 24ஆம் தேதியே ஊரடங்கு நடப்புக்கு வந்துவிட்டது.
இல்லையென்றால் நாட்டில் 18 லட்சம் மக்களைக் கிருமி தொற்றி இருக்கும் என்றும் 78,000 பேர் மரணமடைந்து இருக்கக்கூடும் என்றும் அரசு தெரிவித்து உள்ளது.
மூன்று கணக்கீடுகளின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அரசாங்கம், ஆனால் அந்தக் கணக்கீடுகள் பற்றிய முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை.
மும்பை, டெல்லி, சென்னை, அகமதாபாத், தானே ஆகிய ஐந்து நகர்களில்தான் கிருமித்தொற்று இப்போது அதிகம் இருப்பதாகவும் மொத்தம் பாதிக்கப்படுவோரில் 60 விழுக்காட்டினர் இந்த நகர்களைச் சேர்ந்தவர்கள் என்றும் மத்திய அரசாங்கம் குறிப்பிட்டு உள்ளது.
கிருமி தொற்றி உள்ளவர்களில் 80 விழுக்காட்டினர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவின் தாராவி குடிசைப் பகுதியில் நேற்றுக் காலை நிலவரப்படி 1,478 பேரைக் கிருமி தொற்றி இருந்தது.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக அங்கு தொற்று மிகவும் கூடிவிட்டது. வெள்ளிக்கிழமை 6,654 பேரைக் கிருமி தொற்றியது.
பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 125,101 ஆகக் கூடியது. 51,784 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். கொரோனா கிருமித்தொற்றுக்கு 3,720 பேர் பலியாகிவிட்டதாக நேற்றுக் காலை நிலவரங்கள் காட்டின.
இதனிடையே, இந்தியாவில் வெள்ளிக்கிழமை மட்டும் 1.15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய மருத்துவ ஆய்வு மன்றம் அறிவித்தது. மொத்தம் 2.84 மில்லியன் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டு இருக்கின்றன என்றும் அது தெரிவித்தது.
இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக மார்ச் 24ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு நடப்புக்கு வந்தது. அதன்பிறகு ஊரடங்கு மூன்று முறை நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 31ஆம் தேதி வரை அது நடப்பில் இருந்து வருகிறது.
இருந்தாலும் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட ஊரடங்கு காலகட்டத்தின்போது பல கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன. ஊரடங்கு நடப்புக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் கிருமி இன்னமும் ஒழிந்தபாடில்லை.
அதுவும் கடந்த சில நாட்களாக தொற்று இதுவரை இல்லாத அளவுக்கு கூடிவிட்டது. ஆனாலும் பலி எண்ணிக்கை அளவு குறைவாக இருக்கிறது என்றும் குணமடைவோர் 41% என்றும் தெரிவிக்கப்பட்டது.