மும்பை: கொரோனா ஊரடங்கு காரணமாக மகாராஷ்டிராவில் சிக்கிக்கொண்ட ஏராளமான உத்தரப்பிரதேச ஊழியர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல பல நாட்களாக இன்னமும் காத்துக் கிடக்கிறார்கள்.
இந்நிலையில் அவர்களில் நூற்றுக்கணக்கான தொழிலாளி களுக்குக் கடைசியாக ஒரு ரயிலில் இடம் கிடைத்தது.
ரயிலில் பலரும் நின்று கொண்டுதான் செல்லவேண்டும் என்ற நிலை இருந்தாலும் சொந்த ஊருக்குத் திரும்புவதை நினைத்து அவர்கள் மகிழ்ந்தனர். ரயில் வியாழக்கிழமை மகாராஷ்டிராவில் உள்ள வாசி என்ற நிலையத்தில் இருந்து புறப்பட்டது.
சுமார் 750 கி.மீ. தொலைவு சென்ற பிறகு பொழுது விடிந்த நேரத்தில் ஒரு நிலையத்தில் ரயில் நின்றது. தங்கள் ஊர் வந்து விட்டது என்ற மகிழ்ச்சியில் ரயிலில் இருந்த உத்தரப் பிரேதேச மக்கள் உற்சாகமாக அடித்துப்பிடித்துக் கொண்டு தரை இறங்கினர்.
ஆனால் அவர்கள் இறங்கிய நகரம் ஒடிசாவில் உள்ள ரூர்கேலா என்பது தெரிந்து பலரும் கோப மடைந்து கொதித்து எழுந்து சத்தம் போட்டு அழுது புலம்பினர்.
அதிகாரிகளைக் கேட்டபோது ரயிலை ஓட்டிவந்தவர் தவறுதலாக ஒடிசாவுக்கு ஓட்டி வந்துவிட்டதாகக் கூறினர். பிறகு அதைமறுத்த ரயில்வே துறை, சில சிறப்பு ரயில்கள் திசை மாற்றி விடப்பட்டதே காரணம் என்றது.
எப்போதுதான் சொந்த ஊருக்குப் போக முடியும் என்று அவர்கள் கேட்டதற்கு, இப்போதைக்கு எதையுமே உறுதியாகக் கூற முடியாது என்று அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.