புதுடெல்லி: இந்தியாவில் முன்பின் ஆராயாமல் மத்திய அரசாங்கம் ஊரடங்கை நடப்புக்குக் கொண்டு வந்ததாகவும் ஆழம் தெரியாமல் காலைவிட்டு அவதிப்படும் நிலையைப் போல பொருளியல் மீட்சிக்கான திட்டம் எதுவும் இல்லாமல் அரசாங்கம் திணறுவதாகவும் எதிர்க்கட்சிகள் சாடி உள்ளன.
கொரோனா கிருமித்தொற்று சூழலில் ஊரடங்கு, வெளிமாநிலத் தொழிலாளர்கள் படும் சிரமங்கள், பொருளியல் பாதிப்பு, வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கிளம்பி உள்ளன.
இவை பற்றி விவாதிப்பதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி தலைமையில் 22 அரசியல் கட்சிகள் இணையக் காணொளி வழி மாநாடு நடத்தின.
அதில் மத்திய அரசாங்கத்தை வசைபாடி எதிர்க்கட்சிகள் பல புகார்களையும் முன்வைத்தன.
அண்மையில் ஒடிசா, மேற்கு வங்காளத்தைத் தாக்கிய அம்பன் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றின.
மாநாட்டில் கலந்துகொண்ட திரிணாமுல் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளின் தலைவர்கள் அனைவருமே மத்திய அரசைப் பல கோணங்களிலும் சாடினர்.
தலைவர்களிடையே பேசிய சோனியா காந்தி, எந்தக் காரணத்திற்காக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே மத்திய அரசாங்கம் ஊரடங்கைச் செயல்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதிலிருந்து வெளியேறி பொருளியலை ஊக்குவிப்பது எப்படி என்பது தெரியாமல் இதற்கான திட்டம் எதுவும் இல்லாமல் மத்திய அரசு திணறுவதாகவும் அவர் கூறினார்.
எல்லா அதிகாரங்களையும் பிரதமர் அலுவலகமே குவித்து வைத்துக்கொண்டு கூட்டாட்சி முறையை மறந்துவிட்டு ஜனநாயகத்தை அறவே கைவிட்டுவிட்டு ஆட்சியை பாஜக நடத்துகிறது என்றாரவர்.
பிரதமர் மோடி, மே மாதம் 18ஆம் தேதி அறிவித்த ரூ.20 லட்சம் கோடி பொருளியல் ஊக்குவிப்புத் திட்டமும் அதன் பிறகு நிதி அமைச்சர் அளித்த விளக்கங்களும் மிகக் கொடூரமான நகைச்சுவைகள் என்று சோனியா வர்ணித்தார்.
இப்போதைய பாஜக அரசாங்கம் எந்தவொரு பிரச்சினையிலும் அரசியல் கட்சிகளைக் கலந்து ஆலோசிப்பதே இல்லை என்று குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவி, பொதுத் துறை நிறுவனங்களை விற்பது முதல் தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்வது வரை அரசாங்கம் தன்னிச்சையாகவே செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்தியப் பொருளியல் படு மோசமான நிலையில் தொடர்ந்து இருப்பதாகவும் அது தொடர்ந்து இறங்குமுகமாகி வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இந்தப் பேரழிவை பாஜக அரசு கண்டுகொள்வதே இல்லை என்றார்.
கொரோனா கிருமிக்கு எதிரான போர் 21 நாட்களில் முடிந்துவிடும் என்று பிரதமர் கணித்து கூறியது எந்த அளவுக்குப் பொய் என்பதை மக்கள் இப்போது உணர்கிறார்கள் என்று குறிப்பிட்ட சோனியா, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை கொரோனா இந்தியாவைவிட்டு போகாது என்றார்.