சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த 28 வயதான அவரது உறவினருக்கும் இன்று (மே 24) திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
மணப்பெண் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 21ஆம் தேதி சென்னையில் இருந்து மணப்பெண் மற்றும் அவரது உறவினர்கள் சேலம் மாவட்டத்திற்கு சென்றனர்.
அப்போது தலைவாசல் நத்தக்கரை சோதனைச் சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அதில் மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நேற்று மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அவருடன் வந்த 12 பேரில் 9 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. மேலும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி வீடு உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் திருமணம் முடிந்ததும் அந்த பகுதியில் நோய் தடுப்பு பணி முழுமையாக மேற்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், சமூக இடைவெளியைப் பின்பற்றி 5 பேர் மட்டுமே பங்கேற்று திருமணம் நடத்திக் கொள்ளவும், அனைவரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
அதன்படி இன்றுகாலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் அவர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டார். அவருக்கு உடல்நலக் குறைவு இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மணமகன் உட்பட குடும்பத்தார் வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online