புதுடெல்லி: இந்தியாவில் உள்நாட்டு விமானச் சேவை இன்று துவங்க உள்ள நிலையில், தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
திடீரென விமானப் பயணங்கள் மூலம் வந்து சேரும் பயணிகளுக்காக சில நகரங்களை திறந்து விடுவதற்கு அம்மாநிலங்கள் தயாராக இல்லை.
சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் உள்நாட்டு விமானச் சேவை இன்று தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பல்வேறு விதிமுறைகளையும் அறிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மாநிலம் தமிழகம் ஆகும். மே மாத இறுதி வரை விமானச் சேவையை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு கோரியது.
இதையடுத்து மகாராஷ்டிராவும் மேற்கு வங்கமும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தன. எனினும் மத்திய அரசு தனது அறிவிப்பை திரும்பப் பெறவில்லை. இதனால் சில குழப்பங்களுக்கு இடையே உள்நாட்டு விமானச் சேவை இன்று மீண்டும் துவங்குகிறது.
கொரோனா கிருமி விவகாரத்துக்கு மத்தியில் அம்பன் புயலின் தாக்கமும் மோசமாக இருப்பதால் கோல்கத்தா விமான நிலையத்தை இயக்க மேற்கு வங்க அரசு விரும்பவில்லை.
எனினும் சில மாநிலங்களின் இந்தக் கோரிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சும் விமானப் போக்குவரத்து அமைச்சும் இதுவரை பதில் ஏதும் அளிக்கவில்லை என்பதால் விமானச் சேவை திட்டமிட்டபடி துவங்குகிறது.
எனவே விமான நிறுவனங்கள் மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறப்படுகிறது.
தங்கள் மாநிலத்துக்குள் நுழையும் உள்நாட்டுப் பயணிகளை தனிமைப்படுத்துவது தொடர்பில் மாநில அரசுகள் சில விதிமுறைகளை வகுத்துள்ளன.
இதே வேளையில் ஆரோக்கிய சேது செயலி மூலம் கிருமித்தொற்று இல்லாதவர் என்று அடையாளம் காணப்பட்டவரை தனிமைப்படுத்த வேண்டியதில்லை என மத்திய அரசு கூறியுள்ளது.