புதுடெல்லி: ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அடுத்த 10 தினங்களுக்கு 2,600 சிறப்பு ரயில்களை இயக்கப் போவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ் கடந்த 1ஆம் தேதி முதல் இத்தகைய சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
"இதுவரை 2,570 சிறப்பு ரயில்கள் மூலம் 32 லட்சம் தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு 1,246 ரயில்களும், பீகாருக்கு 804 ரயில்களும், ஜார்க்கண்டுக்கு 124 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.
"அடுத்த 10 நாட்களில் மேலும் 2,600 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். அவற்றின் மூலம் 36 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்," என்று வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார்.

