ஒருமுறையல்ல, இரண்டு தடவைகள் விஷப் பாம்பை விலைக்கு வாங்கி மனைவியைக் கடிக்கவிட்டு, அவரது மரணத்துக்குக் காரணமாகியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஆடவர் ஒருவர்.
கொல்லம் அருகே அனச்சலைச் சேர்ந்த சூரஜ் என்பவரின் மனைவி உத்ரா இம்மாதம் ஏழாம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்தார்.
அதன் தொடர்பில் போலிசார் மேற்கொண்ட விசாரணையில், மனைவியைக் கொல்வதற்காகவே திட்டமிட்டு சூரஜ் 5,000 ரூபாய்க்கு ஒரு பாம்பை விலைக்கு வாங்கியதாகத் தெரியவந்தது.
அவ்வாறு அவர் பாம்பு வாங்கி சதி செய்தது இது முதல்முறையல்ல.
ஏற்கெனவே, கடந்த பிப்ரவரி மாதத்தில் 5,000 ரூபாய்க்கு பாம்பு வாங்கி மனைவி உத்ராவுக்கு தெரியாமலேயே அவரைக் கடிக்கவிட்டதும் தெரியவந்துள்ளது.
ஆனால், அப்போது உத்ராவின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மீண்டும் 5,000 ரூபாய்க்கு விஷப் பாம்பு வாங்கிய சூரஜ், மே 7ம் தேதி அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்த உத்ராவை கடிக்க விட்டதாகக் கூறப்படுகிறது..
தனது திட்டம் வெளியில் தெரியாதபடிக்கு, கவனமாக இருந்த சூரஜ், மனைவியிடம் அன்பாக இருப்பது போலவே நடித்து வந்ததும் தெரியவந்துள்ளது. சூரஜுக்கும் உத்ராவுக்கும் ஈராண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததாகச் சொல்லப்பட்டது.
மனைவிக்கு பாம்பு கடித்ததை காலை வரை யாரிடமும் சொல்லாமல் இருந்து, அவர் உயிரிழக்க காரணமாகியுள்ளார் சூரஜ்.
நகைக்கு ஆசைப்பட்டு மனைவியை சூரஜ் கொன்றதாக கூறப்படும் நிலையில், அவருக்கு பாம்பு விற்ற சுரேஷ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online