வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குத் திரும்புபவர்களுக்கான புதிய வழிகாட்டி குறிப்புகளை இந்தியாவின் மத்திய சுகாதார, குடும்ப நலவாழ்வு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அவ்வாறு விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வருவோர் 14 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும். முதல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களிலும் அடுத்த 7 நாட்களுக்கு வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவதற்கான செலவை பயணிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைக்கு உட்படுவதாக, வெளிநாட்டிலிருந்து கிளம்புவதற்கு முன்பே படிவத்தில் குறிப்பிட்டு கையொப்பமிட வேண்டும்.
ஆனால், கர்ப்பம், குடும்ப உறுப்பினரின் மறைவு, கடுமையான உடல் நலக் குறைவு, 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுடன் பயணம் செய்வோர் என்பது போன்ற காரணங்கள் இருப்போர் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுவர். அவர்கள் அரோக்கிய சேது செயலியைக் கைபேசியில் கட்டாயம் பதிவிறக்கி செயல்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மற்ற பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியைப் பதிவிறக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, உடல்நலக் குறைவுக்கான அறிகுறிகள் இருப்போர் வெப்பநிலைச் சோதனைக்கு உட்படுவர்.
விமான நிலையங்கள், விமானங்கள் போன்றவை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பான இடைவெளி நடைமுறையைக் கடைப்பிடிப்பதும் தனிநபர் சுகாதாரம் காப்பதும் அவசியம்.
இந்தியாவுக்கு வந்து சேரும் பயணிகள் உடல் வெப்பநிலைச் சோதனைக்கு உட்படுவர். நோயாளிகளுக்கு உடல்நலக் குறைவுக்கான அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ வசதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
மற்றவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவுக்கு வெளிநாட்டுப் பயணிகள் வர அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணங்கள் இன்று தொடங்கின. கொரோனா நிலவரத்தைப் பொறுத்து, அனைத்துலக விமானப் பயணம் ஜூலை மாதத்தில் அனுமதிக்கப்படலாம் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நேற்று தெரிவித்தார்.