இந்தியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை அடுத்து, அந்நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் பத்து நாடுகளுக்குள் ஒன்றாகிவிட்டது இந்தியா.
இன்று (மே 25) காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனா கிருமி 138,845 பேரைத் தொற்றிவிட்டது. அவர்களில் 4,021 பேர் மரண்டைந்துவிட்டனர்; 57,721 பேர் குணமடைந்துவிட்டனர். ஆக அதிகமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 50,231 பேரையும் அடுத்தபடியாக தமிழகத்தில் 16,277 பேரையும் கொரோனா தொற்றிவிட்டது.
தேசிய அளவில் கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டும் இந்தியாவில் கிருமித்தொற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,977 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிருமிப் பரவல் அதிகரித்து வருவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் பீகார் மாநிலத்திற்கான ‘கேர் இந்தியா’ அமைப்பின் குழுத் தலைவரும் நோய்த் தொற்றியல் நிபுணருமான தன்மய் மகபத்ரா கூறியிருக்கிறார். அதனால், கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்த வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
“இந்தியா போன்ற ஒரு நாட்டில் எப்போதும் ஊரடங்கை நடப்பில் வைத்திருக்க முடியாது. சில பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். ஆனாலும், மக்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது,” என்றார் திரு மகபத்ரா.
“இப்போதைய நிலைமயைப் பார்க்கும்போது, ஏப்ரல், மே மாதங்களைக் காட்டிலும் ஜூனில் கிருமித்தொற்றுப் பாதிப்பு மோசமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஜூலை மாத மத்தியில் அது உச்சத்தை எட்ட அதிக வாய்ப்புள்ளது,” என்றும் அவர் சொன்னார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online