புதுடெல்லி: இந்தியாவின் வட மாநிலங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. பல பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியசுக்கு மேல் பதிவாகி இருக்கிறது.
வெயிலின் கடுமை தொடர்ந்து அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் டெல்லி, சண்டிகர் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு உத்தரப் பிரதேசத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“பல இடங்களில் அனல் வீசும். ஒரு சில பகுதிகளில் வெயில் கடுமையாக இருக்கும்,” என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.
வானிலை ஆய்வு வட்டார நிர்வாக மையத்தின் தலைவர் டாக்டர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “அடுத்த இரண்டு, மூன்று நாட்களில் வடஇந்தியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 47 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும்,” என்றார்.
அத்துடன், கோடைக் காலத்தில் சிவப்பு எச்சரிக்கை விடப்படுவது இதுவே முதன்முறை என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டால் பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனப் பொருள்.
கடந்த சனிக்கிழமை ராஜஸ்தானின் பிலானியில் 46.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், விதர்பா, தெலுங்கானா ஆகிய இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே, தமிழகத்திலும் கடந்த வார இறுதியில் வெயில் அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக திருச்சியில் நேற்று முன்தினம் வெப்பநிலை 42.2 டிகிரி செல்சியசாகவும் வேலூரில் 41.7 டிகிரி செல்சியசாகவும் பதிவானது.
இந்நிலையில், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், தேனி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதே நேரத்தில், திருச்சி, கரூர், வேலூர், ஈரோடு, ராணிப்பேட்டை, திருத்தணி ஆகிய மாவட்டங்களில் வெயில் உக்கிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.