புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று விவகாரத்தை எதிர்கொண்டு கையாள்வதில் நாடு முழுவதும் பெங்களூரு உள்ளிட்ட நான்கு நகரங்கள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
இந்த நான்கு நகரங்களும் மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் சுமார் 16 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.
சென்னை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களிலும் நோய்த்தொற்றால் இறப்போர் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க முடியும் என இவ்விரு நகரங்களும் நிரூபித்து இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இதே போல் ஜெய்ப்பூர், இந்தூர் ஆகிய இரு நகரங்களும் பல்வேறு புது முயற்சிகளின் துணையோடு நோய் தொற்றியோரின் எண்ணிக்கை அதிகரிக்காமல் தடுத்திருப்பதாக நகர நிர்வாகத்துக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் கொரோனா கிருமித்தொற்றின் இறப்பு விகிதம் மூன்று விழுக்காடாக உள்ள நிலையில், சென்னை, பெங்களூரு ஆகிய இரு நகரங்களிலும் இறப்பு விகிதமானது ஒரு விழுக்காடாக உள்ளது.
கடந்த சில நாட்களாக பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுடனும் நடைபெற்ற ஆலோசனைகளின் போது பகிரப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் மத்திய அரசு மிக விரைவில் நோய்த்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் சில அறிவுறுத்தல்களை வெளியிடும் எனத் தெரிகிறது.