புதுடெல்லி: சில மாநிலங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் நேற்று இந்தியாவின் மத்திய அரசு உள்நாட்டு விமானப் போக்குவரத்தைத் தொடங்க உத்தரவிட்டது. அதையடுத்து பல மாநிலங்களில் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் பல நகர்களில் விமானச் சேவைகளில் தடை ஏற்பட்டது. இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மட்டும் 82 விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதனால் பயணிகள் செய்வதறியாது விமான நிலையத்தில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதேபோல் மும்பை அனைத்துலக விமான நிலையத்திலும் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் விமான நிலையத்தில் காத்துக்கிடந்தனர்.
மும்பை விமான நிலையத்திற்கு வெளியே காத்திருந்த பெண் விமானி ஒருவர் கூறுகையில் ‘‘நாங்கள் டெல்லிக்கு செல்வதற்கு வந்திருந்தோம். நாங்கள் இங்கு வந்தபோது விமானச் சேவை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்கள். விமான ஊழியர் ஒருவர் எங்களிடம் வந்து, ஒருவேளை இன்று இரவு விமானம் இயக்கப்படலாம் என்றார். ஆனால் அதுவும் உறுதி செய்யப்படவில்லை’’ என்றார்.
கிருமித்தொற்று அச்சம் குறையாத நிலையில் விமானப் போக்குவரத்தை மேலும் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வலியுறுத்தின. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த மாநிலங்கள் சில விதிமுறைகளுடன் விமானச் சேவைகளுக்கு ஒப்புக்கொண்டன. மகாராஷ்டிரா நாள்தோறும் 25 விமானச் சேவைகளுக்கு மட்டுமே ஒப்புக்கொண்டது. அதேபோல் ஹைதராபாத் 30, கோல்கத்தா20 விமானச் சேவைகளுக்குச் சம்மதித்தன.
இந்நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் விமானச் சேவை வழங்குவதில் இருந்து பின்வாங்கிக்கொண்டன.
மாநில அரசுகள் பலவும் தங்கள் மாநிலத்துக்கு வந்து சேரும் விமானப் பயணிகளுக்கு என வெவ்வேறு வகையான விதிமுறைகளை வகுத்துள்ளன. தனிமைப்படுத்துதல், அதற்கான செலவு, நோய்த்தொற்று இருப்பின் அதற்கான சிகிச்சை முறை, கட்டுப்பாடுகள் ஆகியவை மாநிலந்தோறும் மாறுபடுகின்றன. எனவே பயணிகள் இதுபோன்ற விவரங்களை தெரிந்துகொண்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.