இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவல் கட்டுக்கடங்காமல் நீடிக்கிறது. எல்லா மாநிலங்களிலும் உள்ள கிருமித்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 150,000ஐ தாண்டிவிட்டது. கிட்டத்தட்ட 84,000 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை மாலை மத்திய சுகாதார, குடும்பநல அமைச்சு வெளியிட்ட தகவல்படி 24 மணி நேரத்தில் 170 பேர் கிருமிக்குப் பலியாகிவிட்டனர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,337க்கு உயர்ந்தது.
அதே 24 மணி நேரத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 6,387. இம்மாதம் முதல் தேதியன்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,050 ஆகவும் மாண்டோர் எண்ணிக்கை 1,147 ஆகவும் இருந்த நிலையில் கடந்த 26 நாட்களில் பாதிப்பு நான்கு மடங்காகி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் கிருமி பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் கிருமித்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 54,758 ஆகிவிட்டது.