மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அச்சம்பத்து பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார், அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன்.
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் கடையைத் திறந்து வியாபாரத்தை துவக்கினார். ஊரடங்கிற்கு முன்பாக தனது கடையில் பலருக்கு கடன் கொடுத்த பூமிநாதன்; அவற்றை வசூலிப்பது சிரமமாக இருந்ததால் புதிய கடன்கள் கொடுப்பதை தவிர்க்க என முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர், பூமிநாதனிடம் சிகரெட் கடன் கேட்டார். பூமிநாதன் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவருடன் தகராறில் ஈடுபட்டார் குணசேகரன்.
இந்நிலையில், வழக்கம் போல இரவில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார் பூமிநாதன். நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு வந்த குணசேகரன், தனக்கு சிகரெட் வழங்காத பூமிநாதனின் கடையை தீ வைத்து எரித்தார்.
தீ மளமளவெனப் பரவியது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கும் போலிசுக்கும் தகவல் அளித்தனர். தீயணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்புத் துறையினரால் நெருப்பு முற்றிலும் அணைக்கப்பட்டது.
ஆனால், எஞ்சியது கரிக்கட்டையும் சாம்பலும்தான்.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் குறித்து நாகமலை புதுக்கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது குணசேகரனே நெருப்பினை பற்ற வைத்துவிட்டு நாடகமாடியது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் தெரியவந்தது.
குணசேகரனை போலிசார் கைத் செய்தனர். மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் குணசேகரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அவரிடம் மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online