இந்தியாவில் ஊடரங்கு காரணமாக, மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது உடைமைகள், பிள்ளைகளுடன் தங்களது சொந்த ஊர்களை நோக்கிச் செல்கின்றனர்.
போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில் பல்லாயிரம் மக்கள் நடந்தே சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
அரசாங்கம் ஏற்பாடு செய்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்த கிட்டத்தட்ட 10 பேர் தண்ணீர், உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தாங்கள் வேலை செய்துவந்த மும்பையிலிருந்து மேற்கு வங்கத்திலிருக்கும் சொந்த ஊருக்குச் செல்வதற்காக, தங்களது உடைமைகளில் சிலவற்றை விற்று பணம் திரட்டியது மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பம்.
பிழைப்புக்காக உதவி வந்த மூன்று ஆடுகளைக்கூட விற்ற அவர்கள் 30,600 ரூபாய் (S$573) வரை திரட்டினர்.
ரயிலில் பயணம் செய்ய எண்ணிய அவர்களுக்கு பயணச் சீட்டு பதிவு கிடைக்கவில்லை.
வேறு வழியின்றி, விமானம் மூலம் சொந்த ஊர் திரும்ப எண்ணி, இண்டிகோ விமானத்தில் பதிவு செய்தனர்.
விமானச் சேவையை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அந்த விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது; கட்டணமும் திருப்பத்தரப்பட மாட்டாது என்று கூறப்பட்டது.
இதனால் நொந்துபோன அந்தக் குடும்பத்தாரின் பரிதாப கதையைக் கேட்டு, கூடுதல் கட்டணம் ஏதுமின்றி அவர்கள் மூவருக்கும் ஜூன் முதல் தேதி செயல்படுத்தப்பட உள்ள விமானச் சேவையில் இண்டிகோ நிறுவனம் சீட்டுகளைப் பதிவு செய்து கொடுத்துள்ளது.
இந்தத் தகவலை விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.