புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று நாள்தோறும் கிடுகிடுவென கூடி வருகிறது. அந்த நாட்டில் 13 நகரங்கள் படுமோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த நகர்களில் மே மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகும் தனிமைப்படுத்தப்பட்ட வட்டாரங்களில் இருப்பதைப் போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை, சென்னை, டெல்லி, அகமதாபாத், தானே, புனே, ஹைதராபாத், கோல்கத்தா, இந்தூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவை அந்த நகர் பகுதிகள் என்று மத்திய அரசாங்கம் அறிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பிரமுகர்களுடன் அமைச்சரவைச் செயலாளர் ராஜுவ் காபா ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்தக் கூட்டத்தில் அந்த 13 நகர்களின் நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள்.
அந்த நகரங்களில் மே 31க்குப் பிறகும் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் என்று தெரிவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 கிருமி தொற்றி இருப்போரில் சுமார் 70 விழுக்காட்டினர் அந்த நகரங்களில்தான் இருக்கிறார்கள்.
இதனிடையே, இந்தியாவில் நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி மொத்தம் 165,799 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. வியாழக்கிழமை மட்டும் புதிதாக 7,466 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஒரே நாளில் 175 பேர் மாண்டதால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,706 ஆகக் கூடியது. மொத்தம் 71,106 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். உலகளவில் கிருமி அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இந்தியா இப்போது உள்ளது.
கிருமித்தொற்றுக்குச் சீனாவைவிட இந்தியாவில் அதிகம் பேர் பலியாகிவிட்டார்கள் என்று உலகத் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வேளையில், நாட்டில் ஜூலை மாதம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 லட்சம் பேர் கொரோனா கிருமித்தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.
இப்போது நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் பேர் பரிசோதிக்கப்படுவதாக கொவிட்-19 தேசிய சிறப்புப் பணிக்குழுத் தலைவர் டாக்டர் வி கே பால் தெரிவித்தார்.
ஆனால் அத்தகைய சோதனைகள் பற்றிய மேல் விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.
ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கண்டபடி சென்று வருவதால் கிருமிப் பரவல் கூடுகிறது.
இதன் காரணமாக அத்தகைய தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப் படுகிறார்கள்.
அதேபோல வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களும் தனி இடத்தில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள். இம்மாதம் 26ஆம் தேதி நிலவரப்படி இந்தியா முழுவதும் மொத்தம் 23 லட்சம் பேர் தனிமைப் படுத்தப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கின் காரணமாக மொத்தம் 1.20 கோடி பேர் மிகவும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று அனைத்துலக ஆய்வு ஒன்று கூறுகிறது.
ஊரடங்கு காரணமாக வருமான இடைவெளி கூடும் என்றும் ஏழ்மை இன்னும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.