புதுடெல்லி: புதுடெல்லியில் நாடாளுமன்ற வளாக அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் அதிகாரிக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து நாடாளுமன்ற வளாகம் அருகே உள்ள இணைப்புக் கட்டடத்தின் 2 மாடிகள் மூடப்பட்டுவிட்டன.
நாடாளுமன்ற மேலவையின் செயலகத்தில் அந்த அதிகாரி வேலை பார்த்து வந்தார். அவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டதை அடுத்து அவருடைய மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தொற்று ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த அதிகாரி பணியாற்றி வந்த அலுவலகம் மூடப்பட்டது.
முற்றிலும் மருந்தடித்துச் சுத்தப்படுத்தப்பட்டது. மிகவும் எச்சரிக்கையுடன் உடல்நிலையைக் கவனித்துக் கொள்ளுமாறு அந்த அதிகாரியுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் ஊடகச் செய்தி மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி ஒருவருக்குச் சுமார் ஒரு வாரத்துக்கு முன் கிருமித்தொற்று ஏற்பட்டது.
இந்த அதிகாரி மே 12ஆம் தேதி முதல் வேலை பார்த்தார். இவரின் அலுவலகம் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருக்கிறது.
இதற்கு முன்னதாக ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற ஊழியர் ஒருவருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டு இருந்தது. மொத்தம் நாடாளுமன்ற ஊழியர்கள் நால்வரைக் கிருமி தொற்றி உள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற மக்களவைச் செயலகத்தில் 3,000 பேருக்கும் அதிக ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்தக் கட்டடத்திற்குச் சுமார் 100 மீட்டர் தொலைவில் இணைப்புக் கட்டடம் இருக்கிறது.
நாடாளுமன்றம் மே மாதம் 3ஆம் தேதி முதல் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படுகிறது.