மும்பை: இந்தியாவிலேயே கொரோனா தொற்று மகாராஷ்டிராவில்தான் அதிகமாகக் கூடி வருகிறது. அங்கு நேற்றுக் காலை 8 மணி நிலவரப்படி ஏறக்குறைய 60,000 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருந்தனர்.
அந்த மாநிலத்தில் மொத்தம் 1,982 பேர் கொவிட்-19 கிருமிக்குப் பலியாகி இருக்கிறார்கள். 18,616 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். இதுவரையில் 419,417 பேர் சோதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தாராவியில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை சுமார் 1,700 ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை ஏறக்குறைய 65 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, அந்த மாநிலத்தில் தொற்று அதிகம் பரவுவதற்கு கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டதே காரணமாக இருக்கக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மகாராஷ்டிராவில் கிருமித் தொற்று அதிகமாகக் காணப்படும் பகுதிகளில் இருந்து மக்கள் இதர மாவட்டங்களுக்கு செல்கிறார்கள் என்றும் இதன் காரணமாகவே தொற்று கூடுகிறது என்றும் மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப்பி கூறினார்.
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இன்னும் கூடும் என்றும் தெரிவித்த அவர், என்றாலும் கிருமித்தொற்றை எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மகாராஷ்டிராவிலேயே மும்பையில்தான் தொற்றும் மரணமும் அதிகமாக இருக்கிறது. அந்த மாநிலத்தில் இதுவரையில் 25 போலிஸ்காரர்கள் கொரோனா தொற்று காரணமாக பலியாகிவிட்டார்கள். மொத்தம் 2,211 போலிஸ் அதிகாரிகளைக் கிருமி தொற்றி இருக்கிறது.
இவ்வேளையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றாலும் தலைநகர் மும்பையில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“மே 31க்குப் பிறகு மத்திய அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப கொஞ்சம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் என்று கருதுகிறோம்.
“கட்டுப்பாடுகள் நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் விரும்பினால் அதையே நாங்களும் செய்ய வேண்டி இருக்கும்,” என்று மகாராஷ்டிராவின் நீர்வளத் துறை அமைச்சர் ஜெயந்த் பட்டேல் கூறினார். மாநிலத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதில் முதல்வர் உத்தவ் தாக்கரே மிகவும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுவதாகக் கூறப்படுகிறது.