புதுடெல்லி: கொரோனா கிருமித்தொற்று முடிவுக்கு வந்ததும் இந்தியா காணவிருக்கும் பொருளியல் எழுச்சி உலகிற்கு ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி இந்திய மக்களுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்தார்.
கிருமித்தொற்றைச் சமாளிக்க அரசாங்கம் அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி திட்டம் நாட்டைச் சுயசார்பு நிலைக்குக் கொண்டு செல்லும் என்றார் அவர்.
அந்தத் திட்டம் காரணமாக அனைத்து வகை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றார் அவர். திரு மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்று ஓராண்டு நிறைவடைகிறது.
அதைக் குறிக்கும் வகையில் அவர் மக்களுக்கு கடிதம் எழுதினார்.
கொரோனா கிருமித்தொற்று இந்தியா சுயசார்பு நாடாக மேம்படுவதற்குத் தேவையான வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருப்பதாக அவர் கூறினார்.
கடந்த ஓராண்டில் தன்னுடைய அரசாங்கம் சாதித்தவற்றை அந்தக் கடிதத்தில் பிரதமர் மோடி பட்டியலிட்டார். 9.5 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 72,000 கோடி போடப்பட்டு இருக்கிறது.
வரலாற்றிலேயே முதன்முறையாக 60 வயதுக்குப் பிறகு விவசாயிகள், பண்ணைத் தொழிலாளிகள் போன்ற உழைப்பாளிகளுக்கு மாதாமாதம் ரூ. 3,000 ஓய்வூதியம் கிடைக்க வழி செய்யப்பட்டு இருக்கிறது என்றெல்லாம் பிரதமர் குறிப்பிட்டார்.
கொரோனா கிருமிக்கு எதிரான போரில் இந்தியா வெற்றிப்பாதையில் முன்னேறி வருவதாகவும் திரு மோடி குறிப்பிட்டார்.
கிருமித்தொற்றைத் தவிர்க்க நடப்பில் உள்ள முடக்கம் காரணமாக மக்கள் அனைவரும் பெரிய துன்பத்துக்கு ஆளாகி வருவதாகவும் அவர்களின் துன்பத்தை ஒழிக்க தாங்கள் ஒற்றுமையாக, தீர்மானத்துடன் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் தன் கடிதத்தில் தெரிவித்தார்.
தாங்கள் சந்திக்கும் சங்கடங்கள் அனைத்தும் பேரழிவுகளாக மாறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது என்று வலியுறுத்திய அவர், இந்த நெருக்கடியிலிருந்து மீண்டுவர வேண்டும் என அனைவரும் உறுதிகொள்ளவேண்டும் என்றார்.
ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கிய 370 பிரிவை நீக்கியதால் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டு உணர்வு வெளிப் பட்டதாகவும் அயோத்தி ராமர் கோயில் தீர்ப்பு நூற்றாண்டுக்காலம் நீடித்து வந்த சிக்கல்களுக்குத் தீர்வாக அமைந்தது என்றும் பிரதமர் கடிதத்தில் குறிப்பிட்டார்.