மும்பை: கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு நேற்று காலை வரையிலான நிலவரப்படி 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை ஒரே நாளில் மேலும் 99 பேர் உயிரிழந்ததை அடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,197ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் 1,700க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 70 பேர் பலியாகிவிட்ட னர்.
வர்த்தக நகரமான மும்பையில் இருந்து லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பி வருகின்றனர். சொந்த ஊருக்குச் செல்ல 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களில் 6.5 லட்சம் பேர் சிறப்பு ரயில்கள் மூலமாகவும் 2 லட்சம் பேர் பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக மும்பை மாநகர காவல்துறை துணை ஆணையர் அசோக் திரனயா தெரிவித்துள்ளார்.
அவர்களில் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், பீகாரைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மும்பையில் இருந்து வெளியேறிய தொழிலாளர்களில் சுமார் 60 ஆயிரம் பேர் தமிழர்கள் என்று அங்குள்ள தமிழ் அமைப்புகள் கூறுகின்றன. தாராவியில் வசிக்கும் 8 லட்சம் பேரில் சரிபாதி பேர் தமிழர்கள் என்றும் கூறப்படுகிறது.
அவர்களில் கணிசமானோர் தமிழகத்துக்குத் திரும்பிவிட்டதால் அங்கு மக்கள் நெருக்கடி குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 நோயில் இருந்து குணமடைந்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.