புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா கிருமித் தொற்று பரவி வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
சனிக்கிழமை ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்தனர். அதேவேளையில் சனிக்கிழமை ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் கொவிட்-19 நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் தினந்தோறும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு வருகிறது.
தற்போது நாடு முழுவதும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 143ஆக அதிகரித்துள்ளது. 5,164 பேர் பலியாகி உள்ளனர்.
சுமார் 90 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், இதுவரை சுமார் 87 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 5வது கட்டமாக ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சில மாநிலங்கள் கூடுதல் தளர்வுகளை அமல்படுத்தியுள்ள நிலையில், சில மாநிலங்கள் ஜூன் 30ம் தேதி வரை எந்தவிதத் தளர்வும் இருக்காது என்றும் அறிவித்துள்ளன.