புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 230 பேர் உயிரிழந்ததை அடுத்து பலியானோர் மொத்த எண்ணிக்கை 5,394ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து கொரோனா கிருமித்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா சில ஐரோப்பிய நாடுகளை முந்திக் கொண்டு ஏழாம் இடத்தை பிடித்துள்ளது.
இதுவரை சுமார் 92 ஆயிரம் பேர் கொவிட்-19 நோயில் இருந்து குணமடைந்துள்ளனர் என்றும், சுமார் 93 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிருமித்தொற்று பாதிப்பு தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 2,286 பேர் பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் 1,038, மத்தியப் பிரதேசத்தில் 350, மேற்கு வங்கத்தில் 317, டெல்லியில் 473, ராஜஸ்தானில் 194, தெலங்கானாவில் 82, உத்தரப் பிரதேசத்தில் 213, ஆந்திராவில் 62, கர்நாடகாவில் 51, பஞ்சாப்பில் 45 பேர் கொவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழகம், டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் 19,844 பேரும், குஜராத்தில் 16,779 பேரும், ராஜஸ்தானில் 8,831 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 8,089 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 7,823 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மாநகரில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மட்டும் 1,279 பேர் கொவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளனர்.
மும்பை பெருநகர பகுதியில் அனைத்து கடைகள், சந்தைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் அலுவலகங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஊழியர்களுடன் இயங்க அனுமதி வழங்கியுள்ள மகாராஷ்டிர அரசு, மும்பையில் அழகு நிலையங்கள், வணிக வளாகங்களை திறக்க மட்டும் அனுமதி வழங்கவில்லை.
இதற்கிடையே கொரோனா கிருமித்தொற்றுப் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டெல்லியின் எல்லைகள் ஒரு வார காலத்துக்கு மூடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.