புதுடெல்லி: கொரோனா கிருமி அச்சுறுத்தல் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் முன்பிருந்ததைக் காட்டிலும் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு நிபந்தனைகளுடன் தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) ஆண்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு, ‘மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு’ என்ற தலைப்பில் துவக்க உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
“கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க வேண்டும். அதேவேளையில் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த வேண்டும். கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும்.
“இந்த சூழ்நிலையில், ‘வளர்ச்சியை மீண்டும் பெறுதல்’ என்ற நடவடிக்கையை சிஐஐ தொடங்கியுள்ளது. இதற்காக இந்தியத் தொழில்துறையினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும், இந்தியாவை சுயசார்பு நாடாக வளர்ச்சி பெறச் செய்வதற்கும், ‘நோக்கம், உள்ளடக்கம், முதலீடு, உள்கட்டமைப்பு, புதுமை’ ஆகிய அம்சங்கள் முக்கியமானவை. இவற்றைக் கொண்டு கொரோனா கிருமித்தொற்றால் வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தை விரைவில் மீட்போம். தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் விரைவில் மீளும். கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்துவது நமது முன்னுரிமைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது,” என அவர் பேசினார்.