மும்பை: பீகாரில் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்த தனது தாயை எழுப்ப முயலும் குழந்தை தொடர்பான காணொளி கடந்த வாரம் சமூக ஊடகங்களில் பரவியது. இதைப்பார்த்த நடிகர் ஷாருக்கான் அந்த குழந்தைக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.
கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவும், ரயில்களிலும், சைக்கிளிலும் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர்.
அவ்வகையில் தன் ஒன்றரை வயதுக் குழந்தையுடன் சொந்த ஊருக்குக் கிளம்பிய பெண் ஒருவர் பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் ரயில்நிலைய நடைமேடையில் இறந்துகிடந்தார்.
அவரின் ஒன்றரை வயதுக்குழந்தை, தனது தாய் இறந்ததுகூடத் தெரியாமல் தாயின் போர்வையை விலக்கிப் பார்த்து எழுப்ப முயல்வதும், அந்தப்போர்வைக்குள் செல்வதுமாக இருந்தது. அதன்பின் விசாரிக்கையில் அந்த பெண் இறந்தது தெரியவந்தது.
இந்தக் காணொளி கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் பரவியது. தாயின் மரணத்தைக்கூட அறியமுடியாத நிலையில் குழந்தை இருப்பதைப் பார்த்து மக்கள் வேதனை அடைந்தனர்.
இந்தக் காட்சிையப் பார்த்த இந்தி நடிகர் ஷாருக்கான் அந்தக் குழந்ைதக்கு தான் நடத்தும் மீர் அறக்கட்டளை மூலம் உதவியுள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் ஷாருக்கான் டுவிட்டரில் நேற்று கூறுகையில் “பெற்றோரை இழந்தவர்களின் வேதனைகளைப் புரிந்து கொண்டவர்கள் மூலம் அந்தக் குழந்தைக்கு எப்போதும் ஆதரவு இருக்கும்,” எனத் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஷாருக்கான் நடத்தும் மீர் அறக்கட்டளை வெளியிட்ட அறிவி்ப்பில் “அந்தக் குழந்தை எங்கள் அறக்கட்டளையை வந்து சேர உதவியவர்களுக்கு நன்றி.
“இப்போது அந்தக் குழந்தை அவரின் தாத்தாவின் ஆதரவில் இருக்கிறது, அந்தக் குழந்தைக்கு நாங்கள் ஆதரவு வழங்குகிறோம்,” எனத் தெரிவித்துள்ளது.
அதன்பின் நடிகர் ஷாருக்கான் டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “அந்தக் குழந்தைக்காக எங்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
“பெற்றோரை இழந்த துரதிர்ஷ்டமான நேரத்தில் அந்தக் குழந்தைக்கு அனைத்து மனவலிமையும் கிடைக்க நாம் அனைவரும் பிரார்த்திப்போம். அந்தக் குழந்தை எவ்வாறு இத்துயரை உணரும் என்பது எனக்குத் தெரியும், நம்முடைய அன்பையும் ஆதரவையும் அந்தக் குழந்தைக்கு வழங்குவோம்,” எனத் தெரிவித்திருந்தார். ஷாருக்கான் நடத்தும் கேகேஆர் அணி, ரெட் சில்லி நிறுவனம், மீர் அறக்கட்டளை, ரெட் சில்லி விஎப்எஸ் ஆகியவை மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏராளமான உதவிகள் மக்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.