சென்னை: பேருந்துகள், ரயில்களில் நீண்டநேரம் பயணிப்பதைவிட விமானத்தில் விரைந்து சென்று குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடலாம் என்ற காரணத்திற்காகவே பயணிகள் பலரும் உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும் விமான நிறுவனங்கள் தங்களிடம் வசூலிக்கும் கட்டணம் இதயத்தை கனக்க வைப்பதாக பயணிகள் கூறியுள்ளனர் என்று ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
டெல்லி, அந்தமான், மதுரை, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கான விமானக் கட்டணங்களை வழக்கமான கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாகவும் இதனால் விமானப் பயணம் மேற்கொள்ளவே தங்களுக்கு தயக்கமாக உள்ள தாகவும் பயணிகள் கூறியுள்ளனர்.
அதேவேளையில், ஒருபக்கம் கட்டணம் மிரட்டினாலும் மற்றொரு பக்கம் கொரோனா கிருமி உயிருக்கு மிரட்டல் விடுப்பதால் விலையைப் பற்றி கவலைப்படாமல் எவ் வளவு பணம் கேட்டாலும் கொடுத்துவிட்டு டிக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு சில பயணிகள் வெளிமாநிலங்களுக்கு பயணம் புறப்பட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.
இதனால்தான் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களில் பயணிகள் அதிகமாகவும் சென்னைக்கு வரும் விமானங்க ளில் பயணிகள் குறைவாகவும் இருப்பதாக தகவல்கள் சுட்டியுள்ளன.
சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று 48 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் டெல்லி, கோல்கத்தா, ஹைதராபாத், திருவனந்தபுரம், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு 24 விமானங்களில் செல்வதற்கு 3,100 பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தனர்.
நேற்று ஒரேநாளில் சென்னை விமான நிலையத்தில் இருந்து 48 உள்நாட்டு விமானங்களில் 5,000க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். கடந்த ஒரு வாரத்தில் நேற்றுதான் இந்தளவு அதிகளவிலான பயணிகள் பயணம் செய்தனர்.
இதற்கிடையே, சென்னையில் இருந்து கோல்கத்தா செல்வதற்கு குறைந்த கட்டணமாக முதலில் ரூ.6,500 இணையத்தில் காட்டப்பட்டது. பயணிகள் பதிவு செய்த போது அந்த டிக்கெட் இல்லாததால் அடுத்த கட்டணமாக ரூ.15,500 டிக்கெட்டை பதிவு செய்யும்படி இணையத் தகவல்கள் கூறின. அந்த டிக்கெட்டும் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்ததைத் தொடர்ந்து ரூ.29,500 டிக்கெட்தான் உள்ளது என்று கூறி அதிக விலையில் டிக்கெட் வாங்க கட்டாயப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 14 நாட்கள் தனிமைப் படுத்துதல், கைகளில் முத்திரை குத்துவது ஆகியவையும் பயணிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.