புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 8,909 கொரோனா தொற்று பாதிப்புகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்து 2,08,252 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 217 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 5,833 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுமார் 1 லட்சத்து 398 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மும்பையை பொறுத்தவரை நேற்று மட்டும் புதிதாக 1,109 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 72,300 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 2,474 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
நேற்று மட்டும் இங்கு 2,287 பேருக்கு கிருமித் தொற்றுப் பாதிப்பது இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 47 பேர் காவலர்கள்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா கிருமித்தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 2,556 காவலர்கள் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 காவலர்கள் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் தமிழ் நாடு உள்ளது. இங்கு 24,586 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 197 பேர் பலியாயினர். நேற்று மட்டும் 1,091 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 22,132 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 556 பேர் பலியாகிவிட்டனர். நேற்று மட்டும் 1,298 பேர் பாதிக்கப்பட்டனர்.